Friday, June 27, 2008

"குசேலனி"ல் ரஜினி ரசிகர்கள் : விஜய், விக்ரம் இல்லை

இன்றோடு 'குசேலன்' படப்பிடிப்புக்கு பூசணிக்காய் உடைக்கப்போகிறார்கள். கடைசி நாள் காட்சிகளை சென்னை அண்ணாசாலையில் உள்ள சாந்தி திரையரங்கில் இன்று காலை எடுத்துக்கொண்டிருந்தார் பி.வாசு.
தியேட்டர் வாசலில் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் கூடியிருக்க, நட்சத்திர முகங்களை காணவில்லை. கேமிராமேன் அரவிந்த்கிருஷ்ணாவுடன் ஆலோசனை செய்துவிட்டு திரும்பிய வாசு காட்சியமைப்பு பற்றி கதைக்க ஆரம்பித்தார்.

"ரஜினியின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதுபோன்ற காட்சியைதான் இன்று எடுத்துக்கொண்டிருக்கிறோம். துணை நடிகர்களை வைத்து இந்த காட்சியை எடுத்தால் த்தரூபமாக உணர்ச்சிகளை பதிவு செய்யமுடியாது. எனவேதான் நிஜமான ரசிகர்களை வரவழைத்து படமாக்குகிறோம்" என்று முடித்தார். வாசு, 'ரெடி டேக்...' என குரல் கொடுக்க, குடம் குடமாக தங்கள் தலைவரின் போஸ்டருக்கு பால் ஊற்ற ஆரம்பித்தனர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்.

மீண்டும் கிடைத்த பிரேக்கில் வாசு நம்மிடம் கூறியதாவது :-

இன்றோடு படப்பிடிப்பு முடிகிறது. படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலை மட்டும் பாக்கி உள்ளது. ஜூலை பத்தாம் தேதி ரிலீஸ் தேதி முடிவாகும். 85 நாட்களில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் படத்தை எடுத்துமுடித்தோம். 600 பிரிண்டுகள் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

"சினிமா சினிமா..." என்று தொடங்கும் பாடல் காட்சியில் விஜய், விக்ரம் போன்ற நடிகர்களை நடனம் ஆட வைப்பதாக இருந்தேன். எனது யோசனையை பத்திரிகைகள் உறுதி செய்து வெளியிட்டன. இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் 'எங்களிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே சார்' என வருத்தப்பட்டனர்.

அப்படியொரு ஐடியா இருப்பாதாக மட்டும் நான் சொல்லியிருந்தேன். ஆனால், மீடியாக்கள் அதனை உறுதி செய்து செய்தி வெளியிட்டதால் இப்படியொரு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அவர்களை நடனமாடவைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

'சார் ஃபீல்டு கிளீயர்...' என அசிஸ்டெண்ட் வந்து சொல்ல அடுத்த டேக்கிற்கு ரெடியானார் வாசு.

வேலைக்காரி விவகாரம்: ஆசினிடம் போலீஸ் விசாரணை

வேலைக்காரப் பெண்ணை கடத்தி சிறை வைத்துள்ளதாக அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகார் அடிப்படையில், மும்பை சினிமா படப்பிடிப்பில் இருந்த நடிகை ஆசினிடம் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.

சென்னை தேனாம்பேட்டை, கருணாநிதி காலனியில் வசிப்பவர் நரசம்மா. இவரது மகள் பியூலா (வயது 22), நடிகை ஆசினிடம் வேலை பார்த்தார். வெளிப்புற படப்பிடிப்புக்கு செல்லும்போது நடிகை ஆசின், பியூலாவை உடன் அழைத்துச் செல்வார்.

ஆசின் இப்போது இந்தியில் தயாராகும் `கஜினி' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக நடந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அவர் மும்பை சென்று விட்டார். உடன் வேலைக்கார பெண் பியூலாவும் சென்றிருந்தார்.

ஆசினிடம் சென்ற பிறகு தன் மகள் வீட்டுக்கு எந்தத் தகவலும் தருவதில்லை என்றும், பியூலாவை அடிமை மாதிரி வைத்திருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார் நரசம்மா. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸில் சில வாரங்களுக்கு முன் அவர் புகார் செய்திருந்ததும் அதன் அடிப்படையில் அப்போதே போலீசார் ஆசினிடமும், பியூலாவிடமும் செல்போனில் விசாரணை நடத்தியதும் நினைவிருக்கலாம்.

சம்பளப் பணத்தைக் கொடுக்காத ஆத்திரத்தில் தன் தாயார் வேண்டுமன்றே தன் மீது புகார் கூறுவதாக பியூலா போலீசில் அப்போது தெரிவித்திருந்தார்.

போலீஸ், வழக்கு என்று வருவதை விரும்பாத ஆசினும், பியூலாவை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜர்படுத்துவதாகக் கூறியிருந்தார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை.

ஆசின் மீது மீண்டும் புகார்:

இதனால், நரசம்மா மீண்டும் ஒரு புகார் மனுவை தேனாம்பேட்டை போலீசில் கொடுத்தார். நடிகை ஆசின் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து தன்னுடைய மகள் பியூலாவை மீட்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதனால், தனி போலீஸ் படையை மும்பைக்கு அனுப்பி நடிகை ஆசினிடமும், வேலைக்காரப் பெண் பியூலாவிடமும் நேரடியாக விசாரணை நடத்த சென்னை மாநகர் போலீஸ் முடிவு செய்து, தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான் அருமைராஜ் தலைமையில் ஒரு போலீஸ் படையை மும்பைக்கு அனுப்பியது.

போலீசார் மும்பை வந்த போது, மும்பை அந்தேரியில் தனது கஜினி பட ஷூட்டிங்கில் இருந்தார் ஆசின். வேலைக்கார பெண் பியூலாவும் உடன் இருந்தார்.

படப்பிடிப்பில் வைத்தே அவர்கள் இருவரிடமும் விசரணை நடத்தியது போலீஸ். சாரணையில், நடிகை ஆசின் ஏற்கனவே செல்போனில் தெரிவித்த தகவலையே கூறினார். பியூலாவை அவரது தாயாரிடம் ஒப்படைக்க எப்போதும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பியூலாவோ, தாயாரிடம் போகமாட்டேன் என்றும், நடிகை ஆசின் தன்னை நல்லமுறையில் நடத்துவதாகவும், அவருடனேயே இருக்க போவதாகவும் கூறினார். இருவரது வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்தனர்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் பியூலாவை, அவரது தாயார் முன்னிலையில் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நடிகை ஆசினை, போலீசார் கேட்டுக்கொண்டனர். அதற்கு ஆசின் சம்மதம் தெரிவித்தார்.

இந்த நேரடி விசாரணையிலும், வேலைக்காரப் பெண் உறுதியாக நின்றால், அவர் விருப்பப்படியே ஆசினுடன் இருக்க விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வளைந்து கொடுக்கும் சிம்பு வாய் பிளக்கும் சிலம்பாட்டம் டீம்!

முன்பு போல் இல்லை சிம்பு. இப்படி நல்ல சர்டிபிகேட் கொடுக்கிறார்கள் சிலம்பாட்டம் யூனிட்டை சேர்ந்தவர்கள். முட்டிக்காலில் வலி என்றால், குறைந்தது மூன்று வாரங்களாவது ரெஸ்ட் எடுப்பதுதானே ஹீரோக்களின் ஸ்டைல்?
சிலம்பாட்டம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தபோது முட்டிக் காலை தரையில் ஊன்றிய சிம்புவுக்கு பலத்த அடி, அப்படியே சாய்ந்து விட்டாராம். ஆனால், விழுந்தால் எழ முடியாமல் தவிப்பதற்கு இவர் யானை அல்ல. குதிரை! (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே) அடுத்த நாளே படப்பிடிப்புக்கு வந்து ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறார் அத்தனை பேருக்கும். என்னாலே நஷ்டம் வரக்கூடாதில்லையா? என்றாராம் சிம்பு (பார்றா...!)

இப்படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு, முதலில் தோன்றுவது ஐயராத்து அம்பி கேரக்டரில். பிளாஷ்பேக்கில் இளசுகளின் மனசை குறிவைக்கும் இளைஞனாக தோன்றுவாராம். இரண்டு ஜோடிகளில் ஒருவரான சினேகா, சிம்புவுடன் நடிப்பதை இதற்கு முன் மறுத்திருந்தார். ஆனால், ஏன்தான் அப்படி மறுத்தோமா என்று சினேகா கவலைப்படுகிற அளவுக்கு இருந்ததாம் சிம்புவின் அப்ரோச்!

கெட்டவன் படத்தை மறுபடியும் துவங்க திட்டமிட்டிருந்தாலும், தனது மன்மதன், வல்லவனை ஹிந்திக்கு கொண்டு போக வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது சிம்புவுக்கு. இரண்டில் எதை முதலில் செய்வார் என்றும் எதிர்பார்ப்பும் இருக்கிறது ரசிகர்களிடம்.